குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா நெருங்கும் நிலையில் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் வியாபாரம் அமோகம்

18 hours ago 3

*ரூ.80 லட்சம் வரை விற்பனை

கே.வி.குப்பம் : குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா நெருங்கும் நிலையில் கே.வி.குப்பத்தில் நேற்று காலை நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதில் ரூ.80 லட்சம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை யன்று ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இந்நிலையில் திங்கட்கிழமையான நேற்று காலை சந்தை வழக்கம்போல் கூடியது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் லோடு வேன் மூலம் அழைத்து வரப்பட்டன. இதில் ஏராளமான வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு ஆடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தனர். ஆடுகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது.

வெள்ளாடுகள், முத்து கிடாய் ரகங்கள், நாட்டு ரக கிடாய்கள், கசையாடுகள், செம்மறி ஆடுகள், என பல்வேறு ரகங்கள் கொண்ட ஆடுகள் அதிகம் கொண்டுவரப்பட்டிருந்தது.

மொத்தமாக 3,000 ஆடுகள் வரையும், தலா ஒரு ஆடு ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கிராமங்களில் அம்மன் திருவிழாக்கள் தற்போது தொடங்கி உள்ளதாலும், நேர்த்திக்கடனுக்காக ஆடுகள் வெட்டுபவர்கள் அதிக அளவில் ஆடுகளை வாங்குவதால், ஆடுகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும் வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா வருகிற 15ம் தேதி நடக்கவுள்ள நிலையில் ஆடுகள் வியாபாரம் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதேபோன்று வரும் வாரங்களில் கூடுதலாக வியாபாரம் களை கட்டும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

The post குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா நெருங்கும் நிலையில் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் வியாபாரம் அமோகம் appeared first on Dinakaran.

Read Entire Article