காலத்தால் உருவாக்கப்பட்டவன் கவி; காலத்தை உருவாக்கியவன் மகாகவி : கவிஞர் வைரமுத்து வாழ்த்து!!

1 week ago 8

சென்னை : கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில், செப்.11-ம் தேதி அன்று ‘மகாகவி’ நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார்.இதைத்தொடர்ந்து ஆண்டுதோறும், செப்.11 ‘மகாகவி நாளாக’ தமிழ்நாடு அரசால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மகாகவி பாரதியாரின் நினைவு நாளை ஒட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனிடையே கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில்,

“கவிக்கும் மகாகவிக்கும்
என்ன வேறுபாடு?

காலத்தால் உருவாக்கப்பட்டவன்
கவி;
காலத்தை உருவாக்கியவன்
மகாகவி

ஏகாதிபத்தியத்துக்கு எதிராக
இந்திய விடுதலைக்கு ஆதரவாக
ஒரு ஜனநாயகக் காலத்தை –

பண்டித மொழிக்கு எதிராக
பாமர மொழிக்கு ஆதரவாக
ஓர் இலக்கியக் காலத்தை –

உருவாக்கியதில்
பாரதி ஒரு மகாகவி

எரிக்கப்படுகிற வரைக்கும்
வாழ்வில் அப்படி
வறுமைப்பட்டவனும்
எரித்து முடித்தபிறகு
வாழ்வில் அப்படிப்
பெருமைப்பட்டவனும்
அவனைப்போல்
இன்னொருவர் இல்லை

இன்று அவன்
உடல் மறைந்த நாள்

அவன்
நீங்கா நினைவுக்கும்
தூங்காப் புகழுக்கும்
தமிழ் அஞ்சலி,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post காலத்தால் உருவாக்கப்பட்டவன் கவி; காலத்தை உருவாக்கியவன் மகாகவி : கவிஞர் வைரமுத்து வாழ்த்து!! appeared first on Dinakaran.

Read Entire Article