காற்றில் சாய்ந்த பூண்டு செடிகள்

1 week ago 8

*மகசூல் பாதிக்கும் அபாயம்

ஊட்டி : காற்றில் சாய்ந்த பூண்டு செடிகளால் தரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பூண்டு செடிகளை நிமிர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி 3 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யும். இதனால், அங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கும். அதுபோல், மண் சரிவுகள் ஏற்படும். மேலும், விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்து காய்கறிகளுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்தால், பூண்டு செடிகள் தரையில் விழுந்து மகசூல் பாதிக்கும்.

இதனால், ஆண்டு தோறும் ஜூன் மாதத்தின் போது காற்று அதிகமாக வீசும் பகுதிகளில் பூண்டு செடிகள் பயிரிடுவதை விவசாயிகள் தவிர்த்து வருவர். எனினும், ஒரு சில பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பூண்டு செடிகள் காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் தரையில் விழுவது வாடிக்கை. இந்நிலையில், கடந்த வாரம் நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. அப்போது ஏமரால்டு, நஞ்நாடு, கப்பத்தொரை, இத்தலார் போன்ற பகுதிகளிலும், மாவட்டத்தின் வேறு சில பகுதிகளிலும் பயிரிடப்பட்டிருந்த பூண்டு செடிகள் காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்காமல் தரையில் விழுந்தன.

இதனால், மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பூண்டு செடிகள் பாதிக்காமல் இருக்க அவைகளை சரி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தரையில் விழுந்த பூண்டு செடிகளை ஒன்றிணைத்து அதனை ஒரு கயிறு கொண்டு கட்டி நிமிர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post காற்றில் சாய்ந்த பூண்டு செடிகள் appeared first on Dinakaran.

Read Entire Article