கார் ஒர்க்‌ஷாப்பில் பயங்கர தீ விபத்து: ராமாபுரத்தில் பரபரப்பு

16 hours ago 3


பூந்தமல்லி: ராமாபுரத்தில் கார் ஒர்க்‌ஷாப்பில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான கார்கள் எரிந்து சேதமானது. சென்னை நந்தனத்தை சேர்ந்தவர் முகமது மசூர் (30). சென்னை ராமாபுரம் நடேசன்நகர் பகுதியில் கார்கள் பழுது நீக்கும் ஒர்க்ஸ் ஷாப் நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு ஊழியர்கள் பணியை முடித்துவிட்டு ஒர்க்ஸ் ஷாப் மூடிவிட்டு சென்றுள்ளனர்.‌ இந்த நிலையில் இன்று அதிகாலை ஒர்க்ஸ் ஷாப் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அசோக் நகர் மற்றும் விருகம்பாக்கம் பகுதிகளில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் ஒர்க்ஸ் ஷாப்பில் பழுது நீக்கம் செய்வதற்காக நிறுத்தி வைத்திருந்த சில கார்கள் முற்றிலும் எரிந்து சேதமானதாக தெரிகிறது.

சேத மதிப்பு பல லட்சம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதிகாலை நேரத்தில் தீவிபத்து நடந்ததாலும் தீ உடனடியாக அணைக்கப்பட்டதாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இதுகுறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

The post கார் ஒர்க்‌ஷாப்பில் பயங்கர தீ விபத்து: ராமாபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article