எதிர்பார்த்தது நடக்காததால் விரக்தியில் தமிழிசை பேசுகிறார்: திருமாவளவன் பதிலடி

2 days ago 3

வேலூர்: எதிர்பார்த்தது நடக்காத ஏமாற்றத்தால் விரக்தியில் தமிழிசை பேசுகிறார் என திருமாவளவன் கூறினார். வேலூரில் வி.சி கட்சி சார்பில் மது ஒழிப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு வேலூர் மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மதுஒழிப்பு மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டில் பங்கேற்க திமுக முன் வந்திருக்கிறது.

மாநாட்டுக்கு தோழமைக் கட்சியை சேர்ந்த மகளிர் அணியையும் அழைக்க முடிவு செய்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைபடுத்த வேண்டும். இந்தியா முழுவதும் ஒருமித்த கருத்துடன் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்று ஒன்றிய அரசையும் வலியுறுத்துகிறோம். முதல்வரிடம் அளித்த மனுவை யாரும் படித்துப் பார்க்கவில்லை. எனது பேட்டியை முழுமையாக கேட்காமல் எதிர்மறையாக விமர்சிக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களுக்கு மேல் உள்ளது.

ஆனால் இப்போதே நான் விடுத்த ஒரு பொதுவான வேண்டுகோளை அவர்கள் அரசியலாக்குகிறார்கள். அரசியல் ஆக்கியவர்கள் ஒரு செயல் திட்டத்தை வைத்துக்கொண்டு அதை ஊதி பெரிதாக்குகிறார்கள். அது நிறைவேறவில்லை என்பதால் ஏமாற்றம் அடைந்தவர்கள் எரிச்சல் அடைகிறார்கள். தேர்தல் நேரத்தில் தான் தேர்தல் முடிவுகளை எடுப்போம். இப்போது சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டிய தேவை உள்ளது. இதைத் தேர்தலோடு முடிச்சு போட வேண்டாம். முதல்வருடன் சந்திப்பு குறித்து தமிழிசை பேசியுள்ளது, அவர்கள் எதிர்பார்த்தது நடக்காத ஏமாற்றத்தால் விரக்தியில் பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post எதிர்பார்த்தது நடக்காததால் விரக்தியில் தமிழிசை பேசுகிறார்: திருமாவளவன் பதிலடி appeared first on Dinakaran.

Read Entire Article