தெஹ்ரான்ஈரான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்த போர், தற்போதும் தொடர்கிறது. இந்தப் போரின்போது, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, மற்றொரு மேற்காசிய நாடான ஈரான் ஆதரவு தெரிவித்தது. மேலும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா, ஹவுதி பயங்கரவாத அமைப்புகளும், இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தின.
ஈரானும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே மத்திய கிழக்கில் மற்றும் மேலும் அழிவுகரமான ராணுவ மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் ஈரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் ஈரான் தெஹ்ரானில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. வான்வழி தாக்குதலில் தெஹ்ரான் நகரம் புகை மண்டலமானது.
இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஈரான் துணை ராணுவப் படை தலைவர் ஹூசைன் சலாமி உயிரிழந்தார். ஈரான் மீது தாக்குதலை தொடர்ந்துள்ள இஸ்ரேல் தங்கள் நாட்டில் உள்ள விமானப் படை தளங்களை மூடியுள்ளது. இருநாடுகள் உடனான மோதலையடுத்து ஈராக் தனது வான்பாதையை மூடியது; அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்தது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் நாட்டில் இஸ்ரேல் அவசர நிலையை அறிவித்தது.
இது தொடர்பாக பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு; ஈரானின் இதயப் பகுதியை தாக்கினோம். ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மையப் பகுதி மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளோம். மத்திய ஈரானில் யூரேனியம் இருப்பு வைக்கப்பட்டுள்ள தளம் மீது இஸ்ரேல் பல முறை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான் நாட்டுக்கான இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பாக இருக்கவும் தேவையற்ற நடமாட்டத்தை தவிர்க்கவும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
The post ஈரான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்: ஈரான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.