சென்னை: ஆன்லைன் விளையாட்டுகள் இளைய சமுதாயத்தின் முக்கியப் பிரச்சினையாக மாறி வருவதாகவும், மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், இது குறித்த விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்த தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாகுதல் குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று (செப்.11), சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள மாநகராட்சி நிர்வாக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த முகாமை, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: “தொழில்நுட்பம் என்பது இருபுறமும் கூரான வாள் போன்றது. அதை ஆக்கபூர்வமாகவும், தீயவழிகளிலும் பயன்படுத்தலாம். இணைய வழி சாதனங்கள் தொழில் சார்ந்த பயன்பாடு என்பதை தாண்டி ஒரு பொழுதுபோக்குக்காக பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை நாம் தடுக்க இயலாது. காலப்போக்கில் இன்னும் அதிகரிக்கும்.