ஆனைமலை உட்கோட்டத்தில் ரூ.2.10 கோடியில் பூலாங்கிணறு நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி: அதிகாரிகள் நேரில் ஆய்வு

1 week ago 13

ஆனைமலை: ஆனைமலை உட்கோட்டம் பூலாங்கிணறு செல்லும் நெடுஞ்சாலையில்,ரூ.2.10 கோடியில் அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. இதனை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை உட்கோட்ட நெடுஞ்சாலைகள் குறுகலானவற்றை அகலப்படுத்துவதற்காக சில மாதத்திற்கு முன்பு ஆய்வு மேற்கொண்டு கணக்கிடப்பட்டது.இதையடுத்து வெவ்வேறு கட்டமாக பல்வேறு இடங்களில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதில்,ஆனைமலை உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் ஒன்றான, ஆனைமலையிலிருந்து பூலாங்கிணறு செல்லும் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதி விரிவாக்க பணி மேற்கொள்ள ரூ.2.10 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், சாலை மேம்பாடு பணியானது அன்மையில் துவங்கப்பட்டு,தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. நேற்று, ஆனைமலை-பூலாங்கிணறு சாலை அகலப்படுத்தும் பணியை, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவண செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் தரமான முறையில் சாலை மேம்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ததுடன், அப்பணியை விரைந்து மேற்கொண்டு, வாகனங்கள் விரைந்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கோவை மாவட்டம் ஆனைமலை உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் குறுகலாக இருக்கும் நெடுஞ்சாலை மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் செல்லும் பகுதியையும் கண்டறிந்து, வெவ்வேறு கட்டமாக அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது, அரசுக்கு தேவையான ஒத்துழைப்பை பொதுமக்கள் அளிக்க வேண்டும்’ என்றனர்.

The post ஆனைமலை உட்கோட்டத்தில் ரூ.2.10 கோடியில் பூலாங்கிணறு நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி: அதிகாரிகள் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article