அதிர்ச்சி சம்பவம்: 15 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்ற 6-ம் வகுப்பு மாணவன்

5 hours ago 2

உப்பள்ளி,

கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி கமரிபேட்டை பகுதியை சேர்ந்தவன் சேத்தன் (வயது 15). இவனும் அதேப்பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவனும் நண்பர்களாக பழகி வந்தனர். சேத்தன் 9-ம் வகுப்பும், 13 வயது சிறுவன் 6-ம் வகுப்பும் செல்ல உள்ளனர். இருவரும் தினமும் ஒன்றாக விளையாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள மைதானத்தில் 2 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் அவர்களுக்குள் சுமார் 5 ரூபாய் விலை கொண்ட சிற்றுண்டி பாக்கெட்டை பகிர்ந்து கொள்வது உட்பட சிறிய பிரச்சினைகள் குறித்து வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதம் முற்றியநிலையில் இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

அப்போது ஆத்திரம் அடைந்த 13 வயது சிறுவன், தனது வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்தான். பின்னர் அவன், சேத்தனை கத்தியால் சரமாரியாக குத்தினான். இதில் பலத்த காயம் அடைந்த சேத்தன், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், விரைந்து வந்து சேத்தனை மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை சேத்தன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். சேத்தனின் உடலை பார்த்து அவனது பெற்றோர் கதறி அழுதனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கமரிபேட்டை போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கும், மருத்துவமனைக்கும் சென்று விசாரித்தனர். பின்னர் சேத்தனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் சேத்தனை 13 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கமரிபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 13 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Read Entire Article