அக்னி தீர்த்த கடற்கரையில் புதிய நிழற்குடை அமைக்க கோரிக்கை

1 day ago 4

ராமேஸ்வரம்,செப்.19: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முறையான பேருந்து நிறுத்தம் இன்றி பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். உலக அளவில் ஆன்மீக சுற்றுலா தலங்களில் ராமேஸ்வரம் மிக முக்கியமான இடமாகும். இங்கு வரும் பக்தர்கள் அதிகளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் கூடுகின்றனர். இங்கு தினமும் காலையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி செல்வது வழக்கம். இதில் ஏராளமான பக்தர்கள் கடற்கரை வரை அரசு பேருந்திலேயே வந்து செல்கின்றனர். அக்னி தீர்த்தக் கடற்கரையில் இருந்து பேருந்து நிலையம், தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நகர் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முறையான பேருந்து நிறுத்தம் இன்றி நிழற்குடை கூட இல்லாததால், பேருந்துக்கு காத்திருக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தங்களின் உடமைகளுடன் வெயிலில் நின்று மிகுந்து சிரமத்துடன் பஸ் ஏறி செல்கின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பெயரளவில் அமைக்கப்பட்டிருந்த நிழற்குடை தற்போது முற்றிலும் சேதமடைந்து யாசகர்கள் தங்குமிடமாக மாறி விட்டது. தற்போது பயணிகள் காத்திருக்க இருக்கை வசதி கூட இல்லாததால் கை குழுந்தைகளுடன் வரும் தாய்மார்கள் மற்றும் வயதானவர்கள் மர நிழல் பகுதியில் ஒதுங்கி பேருந்து வரும் வரை கால் வலிக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.மேலும் இங்கு நகர் பேருந்து நிறுத்தம் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாததால், அரசு பேருந்து நிறுத்துமிடத்தில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அரசு பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்வதில் மிகுந்த சிரமத்தால் தாமதம் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பக்தர்கள் வந்து செல்லும் அக்னி தீர்த்த கடற்கரை பேருந்து நிறுத்தத்திற்கு இருக்கையுடன் கூடிய தரமான நிழற்குடை பேருந்து நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post அக்னி தீர்த்த கடற்கரையில் புதிய நிழற்குடை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article