சென்னை: திறந்தநிலை கல்வி நிறுவனம் மூலம் பெறப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றுகள் பதவி உயர்வு மற்றும் பணி நியமனங்களுக்கு தகுதியானது என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் மதுமதி தெரிவித்துள்ளார். நாட்டில் திறந்தநிலை கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் சான்றுகள் கல்வி அறிவு பெறுவதற்கு மட்டுமே ஏற்கப்படும் என்றும், அவை பணி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளில் ஏற்க முடியாது என்று அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில், அவை குறிப்பிட்ட படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சிலவற்றை ஏற்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி திறந்த நிலை கல்வி நிறுவனங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருந்தால் அவை பதவி உயர்வு, பணி நியமனங்களுக்கு பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ள அரசாணை: கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து, அந்த உத்தரவை ரத்து செய்வதுடன் தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனம் மூலம் வழங்கப்படும் கல்வித் திட்டங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்து பெறப்பட்ட சான்றுகள், மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றுகளுக்கு நிகரானவை என்றும், பதவி உயர்வு மற்றும் பணி நியமனங்களின் போது இந்த சான்றுகள் தகுதியாக ஏற்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.