மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த காலங்களில் 1,550 வணிக வளாக கட்டிடங்களை குடியிருப்பு கட்டிடங்களாக காட்டி, சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநகராட்சி பணியாளர்களுடைய இந்த அலட்சிய நடவடிக்கையால் மாநகராட்சிக்கு அரையாண்டுக்கு ரூ.6 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் 3 லட்சத்து 45 ஆயிரம் கட்டிடங்கள் உள்ளன. இதில் 60,000 வணிக கட்டிடங்களும், மீதமுள்ள கட்டிடங்கள் குடியிருப்பு கட்டிடங்களாகவும் உள்ளன. இந்த கட்டிங்களுக்கு மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள், குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் அடிப்படையில் சொத்து வரி நிர்ணயம் செய்கின்றனர். ஏ, பி, சி கிரேடு அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு ஒரு சதுர அடிக்கு குறிப்பிட்ட சொத்து வரியும், வணிக கட்டிடங்களுக்கு சதுர அடிக்கு ஒரு சொத்து வரியும் நிர்ணயம் செய்யப்படுகிறது.